திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!

திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி ஜமீன்தார் புனித யாத்திரையாக வட இந்திய புண்ணியத் தலங்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தயாரிக்கப்பட்ட அல்வாவை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். அந்தச் சுவையில் மயங்கிய அவர் அந்த அல்வா தயாரித்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்திருக்கிறார். அவர் மூலம் திருநெல்வேலியில் அல்வா தயாரிப்பு துவங்கி இன்று அல்வா என்றால்
திருநெல்வேலி என்றாகி விட்டது என்று ஒரு சாரார் சொல்கின்றனர். வட இந்தியாவிலிருந்து வணிகத்திற்காக த
மிழகத்தின் தென்பகுதிக்கு வந்த ஒரு குடும்பத்தினர் திருநெல்வேலியில் அவர்கள் ஊரின் அல்வாவைத் தயாரித்திருக்கிறார்கள். தாமிரபரணித் தண்ணீரின் சேர்க்கையால் அந்த அல்வா அவர்களின் ஊரில் செய்த அல்வாவை விட மிகவும் ருசியாக இருந்திருக்கிறது. இந்த சுவையான திண்பண்டத்தை இந்த ஊரிலேயே தயாரித்து விற்பனை செய்தால் என்னவென்று அல்வாக் கடையைத் துவங்கி இருக்கிறார்கள் அன்றிலிருந்து அல்வா திருநெல்வேலியில் ஒன்றாகி விட்டது
என்று சிலர் சொல்கிறார்கள்.

எது எப்படியோ இன்று திருநெல்வேலி என்றாலே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அல்வா ஞாபகத்திற்கு வந்து விடுகிறது. இந்த ஊரு அல்வாவிற்கு இருக்கும் சுவையே தனிதான். திருநெல்வேலி முழுக்க அல்வாக் கடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் திருநெல்வேலியில் இருக்கும் நெல்லையப்பர் கோவிலின் எதிரே இருக்கும் "இருட்டுக்கடை" அல்வாவிற்குத்தான் முதலிடம். இதற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகிலுள்ள "சாந்தி ஸ்வீட்ஸ்" கடையின் அல்வாவிற்கு இரண்டாமிடம் (இந்த சாந்தி ஸ்வீட்ஸ் என்கிற பெயரில் திருநெல்வேலி சந்திப்பு மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் இரண்டாம்தரக் கடைகள் நிறைய இருக்கிறது. ஒரு பிரபலமான கடைக்கு இத்தனை போலியான கடைகளா? என்று வியக்க வைக்கும் அளவிற்கு அனைத்துக் கடைகளிலும் சாந்தி ஸ்வீட்ஸ் பெயர்ப்பலகைகள்...) மூன்றாவது இடத்தில் "லெட்சுமி விலாஸ்" கடை அல்வா இருக்கிறது. இது தவிர பல லாலாக் கடைகள் (ஸ்வீட் மற்றும் மிக்சர் போன்றவை விற்பனை செய்யும் கடைகளை லாலாக் கடை என்றுதான் அழைக்கிறார்கள்.) சுவையான அல்வாவைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.


இந்த இருட்டுக் கடையில் அல்வா மாலை நேரத்தில் மட்டும் அதாவது மாலை ஆறு மணிக்குத் துவங்கி இரவு பத்து மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. 82 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணசிங் மற்றும் அவரது மகன் பிஜீலிசிங் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்த அல்வாக் கடையில் மாலை நேரத்தில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அல்வா வியாபாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதனால் இந்த அல்வாக் கடையை திருநெல்வேலி மக்கள் இருட்டுக் கடை என்று அழைத்தனர். கடையைத் துவங்கிய இருவரது மரணத்திற்குப் பிறகு ஹரிசிங் என்பவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார். இப்போதும் இந்த இருட்டுக் கடையில் தங்களது பழைய நிலையிலேயே அதே மனோபாவத்தில் (செண்டிமெண்ட்) அதாவது வெறும் 40 வாட்ஸ் மின் விளக்கு வெளிச்சத்திலேயே கடையில் எவ்விதமான ஆடம்பரமும் செய்யாமல் அல்வா வியாபாரம் நடப்பதால் இந்தக் கடைக்கு இருட்டுக் கடை என்கிற பெயரே நிலையான பெயராகி விட்டது.

இங்கு அல்வாவை 100 கிராம், 200 கிராம் என்கிற அளவுகளில் சுடச்சுட இலையில் வைத்து விற்பனை செய்கிறார்கள். இவ்வூர் மக்கள் இதை விரும்பி வாங்கிச் சாப்பிடுகிறார்கள். கிலோக் கணக்கிலும் வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர். திருநெல்வேலியிலும் இதைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருப்பவர்கள், வெளியூர்களில் இருக்கும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது இந்த இருட்டுக் கடையில்தான் அல்வாவை வாங்கிச் செல்கின்றனர். வெளியூரிலிருந்து வருபவர்கள் திருநெல்வேலிக்கு வரும் போது இருட்டுக் கடை குறித்து தெரியாததாலும், இந்தக் கடை அல்வாவிற்காக இரவு வரை காத்துக் கிடக்க விரும்பாமலும் வேறு கடைகளில் வாங்கிச் செல்கின்றனர். இப்படி வாங்கிச் செல்லும் கடைகளில் திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தின் அருகிலிருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ், லெட்சுமி விலாஸ் கடைகளில் இருக்கும் அல்வாக்கள் சுவையாக இருக்கிறது. மற்ற லாலாக் கடைகளிலும் அல்வா ஓரளவு சுவையாக கிடைக்கிறது. தரம் குறைந்த அல்வாவும் பல போலிக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

சுத்தமான சம்பாக் கோதுமையில் நெய், சர்க்கரை, பால் மட்டும் சேர்த்துச் செய்யப்படும் அல்வா மிகச் சுவையாக கிடைக்கிறது. ஆனால் பல போலிக் கடைகளில் தரமில்லாத கோதுமையில் அல்லது ஜவ்வரிசி மற்றும் பிற மாவுப் பொருட்களையும் கலந்து தயாரிக்கப் படுகின்றன. இது போன்ற கலப்புப் பொருள்களால் தயாரிக்கப்படும் அல்வா சுவையாக இருப்பதில்லை...!!!



நன்றி
திருநெல்வேலி தகவல்



by,
perumagan (விக்னேஷ்)

Category: 0 comments

0 comments:

Post a Comment