ஆயிரம் காலத்துப் பயிர்
அலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் ஒலி, நடுநிசியில் இடுகாட்டில் கேட்கும் நாயின் மரண ஓலமாகக் கேட்டுக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள் மாலதி. அதுவரை விம்மி விம்மி அழுது கொண்டிருந்தவள்,முகத்தை துப்பட்டாவினால் துடைத்து விட்டு, அழுத்தமாக ஒரு முறை மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். இரண்டாவது முறையாக ஒலிக்கிறது,அப்பாவிடமிருந்து அழைப்பு.
இனியும் எடுக்காமல் இருந்தால், இதற்கும் ஒரு பேச்சு வாங்க வேண்டி வரும் என்பதை உணர்ந்தவளாய் விருப்பமின்றி அலைபேசியை எடுத்துக் காதோடு அணைத்துக் கொண்டு "ஹலோ" என்றாள்.
"என்ன, இருந்துகொண்டே எடுக்க மாட்டேன் என்கிறாயா?" அப்பா கோபமாகக் கத்தினார்."அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அப்பா.""இதோ பார், உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன். உனக்கு 26 வயது. இத்தனை வயதுக்குப் பெண் பிள்ளைகள் கல்யாணமாகாமல் இருக்கக் கூடாது. உனக்கு மனதில் என்ன பேரழகி என்று நினைப்பா? வருகிறவனையெல்லாம் வேண்டாம் என்பதற்கு? இப்படியே போனால் உன்னைப் பெண் கேட்டு யாரும் வரப்போவதில்லை. வயதான காலத்தில் எங்களுக்கு ஏன் பாரமாக இருக்கிறாய்?யாரையாவது காதலிக்கிறாயென்றால் சொல்லிவிடு. அவனுக்கே உன்னைக் கட்டி வைத்து விடுகிறோம். எப்படியோ போ. எங்களுக்கு நீ மட்டும் வாரிசு இல்லை. உன் தம்பி இருக்கிறான். அவனுக்குப் பெண் பார்க்க வேண்டும்.இன்றைக்கு உன்னை பெண் பார்க்க வருகிறார்கள். கிளம்பி மாமா வீட்டுக்கு வா.வந்து உன் அழகான முகத்தைக் காட்டிவிட்டுப் போ. எல்லாம் எங்கள் தலையெழுத்து."அலைபேசி முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்பட்டது.
மாலதி, மெளனமாய் சுவற்றை வெறித்தாள்.
பெண் சுதந்திரம் என்பது பல சமயங்களில் குழப்பமான, தெளிவாக அறுதியிட முடியாத ஒன்று என்று நினைக்கத் தோன்றுகிறது. பாமரனுக்கும் புரிய மறுக்கும் ஒன்றாக அது இருக்கிறது. அப்படி ஆனது இந்த சமூக அமைப்பின் அவலம்.
மாலதி பொறியியல் பட்டம் பெற்றவள். அவள் பெற்றோருக்கு சொந்த ஊர் கடலூர். சென்னை வந்தால் மாமன் வீடு, அம்பத்தூரில் இருக்கிறது. அங்குதான் தங்குவர். ஒரு கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக, கை நிறைய சம்பளத்தில், சென்னையில் திருமங்கலத்தை அடுத்த அம்பத்தூர் ஓ.டி. யில் தனியே தோழிகளுடன் தங்கி வேலையில் இருக்கும் பெண் மாலதி. தனி மனித ஒழுக்கம் என்று ஒன்று உண்டு என்று நினைக்கும் வெகு சில இளைய தலைமுறைகளுள் அவளும் ஒருத்தி. மனதின் ஓட்டங்களை அப்படியே வெளிப்படுத்துவதான நடவடிக்கைகள் அவளுடையது. தமிழ் இலக்கியங்கள்,நாவல்கள், கவிதை எழுதுவது, கைவினைப் பொருட்கள், நடனம், கோயிலில் கதாகாலட்சேபம் இவற்றுக்கெல்லாம் நேரம் போனது போக பிறிதெதற்க்கும் நேரமில்லை என்பதுதான் அவள்.
பெண்ணுக்கு வேலை என்பதை இரண்டாவது பட்சமாக நினைக்கும் குடும்பம் அவளுடையது. ஒரு மனிதன், தனது இளம் வயதில் தொடக்க நிலை ஊழியனாக ஒரு கம்பெனியில் சொற்ப வருமானத்தில் சேர்ந்து, வயோதிகத்தில் அதே கம்பெனியில் அதே தொடக்க நிலை ஊழியனாக ஓய்வு பெற எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கு அவளின் அப்பா ஓர் உதாரணம். கணவனுக்கு எவ்வகையிலும் குறைந்தவள் அல்ல மாலதியின் தாய் வள்ளி. வெளி உலகம் தெரியும்முன்பே திருமணமாகி, வீட்டிற்குள் வீரம் பேசும் நாராயணனுக்கு மனைவியாகிப்போனதில், வள்ளி தெரிந்துகொண்ட உலகம் என்பது நாராயணன் காட்டிய உலகம் மட்டுமே. இத்தனைக்கும் வள்ளி அந்தக் காலத்து பி.ஏ.
உறவுகளை உருவாக்குவதும், பலப்படுத்துவதும் எது தெரியுமா? அன்பா?இல்லை. இல்லவே இல்லை. புரிதல். சரியான புரிதல் இல்லையெனில் அன்பு கூட புரியாது. ஆணவமாகத் தோன்றும். திமிராகப் படும். எதையோ நினைத்து ஏமாந்து விட்டதாய் தோற்றம் தரும். கோபம் கொள்ள வைக்கும். இனியும் ஏமாறக்கூடாதென்று எச்சரிக்கை உணர்வு கொள்ள வைக்கும். நம்பிக்கை இழக்கும். நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்க வாய்ப்பில்லை. இந்த சூட்சுமம் வெகு பலருக்குப் புரிவதில்லை. காதல்கள் பொய்த்துப் போவதும்,திருமண வாழ்க்கை முறிந்து போவதும், சகோதரப் பாசம் குன்றிப் போவதும்,நட்பு முறிவதும் என எல்லாமும் புரிதல் தோல்வியடைவதைச் சார்ந்த நிகழ்வுகள்.
மாலதியின் சர்ரியலிஸ கவிதைகள், நாராயணனுக்கு கிறுக்குத்தனம்.அர்த்தமற்ற வார்த்தைக் கோர்வை. மாலதியின் காதல் கவிதைகள், அவரைப் பொறுத்த மட்டில், ஒரு பெண்ணின் காம வெளிப்பாடு. ஒரு விதமான முகமூடி கிழிப்பு. அவளின் சமூக அக்கறை, அவருக்கு வேண்டாத வேலை. காலைக் கட்டிக்கிடந்த குட்டி நாய், தன்னைப் பார்த்துக் குரைப்பது போல. அவருக்குத் தெரிந்து இலக்கியம் என்பது இரண்டே இரண்டு. ஒன்று, ஐவரைக் கணவர்களாக்கிய ஒருத்தியின் கதை. மற்றொன்று, பெண்டாட்டியை அடகு வைத்தவர்களின் கதை. இதைத் தாண்டியும் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை என்பது அவரின் கருத்து. அவர் அகராதியில் புத்தகங்கள் என்பது பள்ளிக்கூடத்துடன் தொடர்புடைய ஒன்று. அவ்வளவே. அவள், எழுத்தின் மூலம் வெளிப்படுத்தும் அவளின் நுட்பமான மன உணர்வுகளை அவர் படிக்க ஆர்வம் காட்டுவதே இல்லை. ஏனெனில் புரியவில்லை. புரியாதது அறியாமை,குறை. குறையுள்ளவனாகக் காட்டிக்கொள்ளுதல் பங்கம். தான் தோற்கடிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம். பயத்தில் எழுவது ஆதிக்க உணர்வு.
எழுத்து வீண் வேலை என்பார். எழுதினாலோ, கேள்வி கேட்டாலோ, கருத்து சொன்னாலோ தன்னை மதிக்காத பெண் என்பார். தன்னை மதிக்காதவரை தானும் மதிக்க வேண்டியில்லை என்பார். மகளிடம் பணம் வாங்கி,பெண்டாட்டிக்கு நகை செய்வார். மாலதி அவருக்கு மகள் அல்ல. போட்டிக்கு நிற்கும் இன்னொரு மனிதன். அவருக்குத் தோன்றியதையே யாரேனும் சொல்லிவிட்டால், அவரை மிகச்சரி என்பார், அவன் ஒன்றுமில்லாதவன் என்றாலும், அரசனென்பார். பிறிதெவரும், அரசனானாலும் ஆண்டி என்று விடுவார். பாராமுகம் காட்டுவார். வாய்ப்பூட்டு போட்டுக்கொள்வார். சமயம் கிடைத்தால், சேறு பூசவும் தயங்க மாட்டார். கேட்டால், உலகத்தைப் பார்த்துக் கற்றுக்கொள் என்று பேசுவார்.
வள்ளிக்கு நாராயணன்தான் வகுப்பறை. அவரை அன்றியும் அவள் வேறெதையும் படித்ததில்லை, பார்த்ததில்லை, கேட்டதில்லை. அவளைப் பொறுத்தமட்டில் அவர் காட்டிய உலகம்தான் கண்முன்னே இருக்கும் ஒரே ஒரு உலகம். வள்ளிக்கு மூத்தவள் என்கிற முறையில் மாலதியின் கேள்விகள் அச்சுறுத்துகிறது. பதில் தெரியவில்லை அல்லது விளக்கஇயலவில்லை.விளக்கிப் பழகியிருக்கவில்லை. பதில்களைத் தேடி பழக்கமில்லை. தன் மரியாதை கெட்டுவிடுமோ என்ற பயம். மாலதியை வள்ளியும் மட்டுப்படுத்தியிருக்கிறாள், சமாளிக்கும் விதமாக. எழுத்தெல்லாம் வீண் என்று பலவீனப்படுத்தியிருக்கிறாள். அப்பா சொல்படி கேள் என்பதாய் அறிவுறுத்தியிருக்கிறாள். ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் செய்யும் அநீதி.ஒரு பெண்ணாக இருந்துகொண்டு ஆணைச் சார்ந்து இருக்கச் சொல்லி நிர்ப்பந்தப்படுத்தியிருக்கிறாள்.
இல்லை. இது, முழுமையும் ஆதிக்க மனோபாவம் இல்லை.நியாயமானபதில்கள் இல்லாதஇடத்துப் பலவீனம் தோன்றுகிறது. பயம் வருகிறது. ஆதிக்கத்தின் கைகள் ஓங்குகிறது. நியாயமானபதில்கள் இல்லை.ஏனெனில், சரியானபுரிதல் இல்லை. சமூகம் இப்படித்தான் இருக்கிறது.இப்படித்தான் பழக்கப்படுகிறது. இப்படித்தான் இது, இதுவா? அதுவா? என்று அறுதியிடப்பட முடியாமல் இருக்கிறது. சாக்ரடீஸை என்ன செய்தார்கள்?காந்தியை என்ன செய்தார்கள்? கேள்வி கேட்பதில்லை. சிந்திப்பதில்லை. சரி,தவறுகளை அறுதியிட, நின்று நிதானிக்க எவருக்கும் பொறுமையில்லை.காரியமாக வேண்டும். அதற்கு மூர்க்கம் உடனடியாகப் பயன்படும். இது ஒன்றுதான் அதற்குத் தெரியும். மாலதிக்குப் பெண் சுதந்திரம் தரப்படவில்லையெனில், தராதது யார்? இன்னொரு பெண்ணும்தானே?
மாலதி, தன்னைப் பற்றியும், தனக்கு என்ன தேவை என்பதைப் பற்றியும் தெளிவாக அறிந்தவள். அவளுக்கும் பயம். வரப்போகிறவனும் இன்னொரு நாராயணனாக இருக்கக்கூடாதென்கிறபயம். அவனுக்கு சர்ரியலிஸம் புரியவேண்டாம். குறைந்தபட்சம், சர்ரியலிஸம் பற்றிச் சொன்னால் கேட்டுக்கொள்பவனாக, கற்பூரம் போல் அதை உள்வாங்கிக்கொள்பவனாக,புத்தகங்களை நேசிப்பவனாக, வாசிக்கும் ஆர்வம் வாய்ந்தவனாக இருப்பானா?தன்னை விட குள்ளமாய் இருந்து ஊரார் கேலிக்கு ஆளாகிவிடாமல், உயரமாய் இருப்பானா? தேநீருக்குக் கூட தன்னை எதிர்பார்க்காமல் இருப்பானா?இரவுகளில் கொட்டாவி விட்டு அறையை விட்டுத் துறத்தாமல் இருப்பானா?வார இறுதிகளில் நடு ஹாலில் குடித்துவிட்டு வாந்தி எடுத்து நாறடிக்காமல் இருப்பானா? அப்பாவைப் போல் பணத்திற்குத் தன்னையே அண்டியில்லாமல் சுயத்துடன் இருப்பானா ? குவாண்டம் பிஸிக்ஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டாம்.குறைந்தபட்சம், தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவனாகவாவது இருப்பானா? தொழில்நுட்பம் பற்றி தெரிந்திருக்கவில்லையெனினும்,சொன்னால் ஆர்வமுடன் கேட்டுக்கொள்வானா? என்றாவது தானும் வீட்டில்,புருஷன் சம்பாதிக்கும் பணத்தில், சொகுசாய் நாவல் வாசிக்க இயலுமாஎன்றெல்லாம் அஞ்சுகிறாள் மாலதி. அவள் பயத்திற்குக் காரணம், 25வருடங்களை கூடவே பயணித்த பெற்றோரிடம் இல்லாத இந்தக் குணங்கள்.இவைகளை வரவழைத்துக்கொள்ளத் துணியாத அவர்களின் நிலைப்பாடு.அப்பேர்ப்பட்ட மனிதர்களுடனான மனச்சிக்கல்கள். குழந்தைப் பிராயத்திலிருந்தே அப்பா, தம்பி, நண்பன், மாமன் எனஎல்லா காலகட்டத்திலும் ஏதோவொரு ஆணுக்கு அடிபணிந்தே கிடந்து இனி மிச்சமுள்ளகாலமும் அப்படியே கழிந்துவிடுமோ என்கிறபயம்.
மாலதிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். எப்படிப் பார்க்கவேண்டும்? ஆசையாய் வளர்த்த, பொறியியல் படித்த, சொந்தக்காலில் நிற்கத் தெரிந்த, ஞானம் அடைந்தபெண்ணுக்கு மாப்பிள்ளை எப்படி பார்க்கவேண்டும்? மாலதியைத் தெரியவில்லை. அவள் எழுத்து புரியவில்லை. அதனால் அவளையே புரியவில்லை. அவள் என்ன என்பது புரிந்தால்தானே அதன் இணையைப் பற்றி தீர்மானிக்க இயலும்? நாராயணனுக்கும், வள்ளிக்கும் மாலதி என்றொரு முகமூடியைத்தான் தெரியும். அந்த முகமூடி கூட அவர்களாக அவளுக்கு அணிவித்தது. 'உங்கள் பையனுக்கு எங்கள் பெண் பொருத்தம் என்று எண்ணுகிறோம்.. மேற்கொண்டு பேசலாமா?' என்பது இரைஞ்சுதல்.அவர்களுக்கு மண்ணைக் கவ்வும் செயல். மாலதி புரியவில்லை. அவள் தேவைகள் புரியவில்லை. அதைப் புரிந்துகொள்ளும் முயற்சி இல்லை.ஆனாலும் திருமணம் செய்யவேண்டும். காலம் கடந்துவிடக்கூடாது என்கிறநிர்ப்பந்தம் விரட்டுகிறது. பெண் கேட்டு வருகிறவர்களுக்குத் தந்துவிடலாம் என்பது அவர்கள் எண்ணம்.
****************************************************மாலதி, குளியலறையை அண்டி முகம் கழுவி துடைத்து, துப்பட்டா சரிசெய்து,மின்விசிறி, மின்விளக்குகள் அணைத்து, அறைக் கதவுகளைத் தாழிட்டு,ஸ்கூட்டியை உதைத்துக் கிளப்பி பத்து கிலோ மீட்டர் பயணித்து அம்பத்தூரிலிருந்து புதூர் செல்லும் வழியில் உள்ள சேது பாஸ்கரா பள்ளிக்கருகில் உள்ள அபார்ட்மென்டின் இரண்டாவது தளத்தில் இருக்கும் மாமா வீட்டிற்கு வர மாலை 4 மணி ஆனது. அப்பா நாராயணன் ஸ்கூட்டி சப்தம் கேட்டு படியேறிவந்த மாலதியை வாசலில் எதிர்கொண்டார்.
"வா மாலதி, அவர்கள் வீட்டில் மாலை ஐந்து மணிக்கு வருவதாக்க் சொல்லியிருக்கிறார்கள். நீ சீக்கிரம் ஒரு புடவை அணிந்து கொள்.தயாராகிவிடு. என்ன?" என்று விட்டு மாலதியின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல்,மனைவியிடம் திரும்பினார்."வள்ளி, மாலதியைத் தயார் செய்துவிடு. இனிப்பு காரமெல்லாம் வாங்கியாகிவிட்டது. அவர்கள் வர வேண்டியதுதான். மாலதியை பெண் பார்க்க வேண்டியதுதான். அதிகபட்சம் ஐந்து பேரை எதிர்பார்க்கலாம். அவர்களுக்குத் தேநீர் தயார் செய்து வை, என்ன?"
"சரிங்க" என்றுவிட்டு மாலதியை அழைத்துப் போனாள் வள்ளி. மாலதியை உடைமாற்றச் சொல்லிவிட்டு சமையலறைக்குள் மாலதியின் அத்தையுடன் ஒண்டிக்கொண்டாள்.பலவந்தப்படுத்துதல் என்பது ஒரு திணிப்பு. அறியாமை. இங்கே மாலதியின் உள்ளக்குறிப்பு, பெற்றவர்களுக்குப் புரியவில்லை. புரியாதபோது,கவலைப்படஏதுமில்லை. எதிராளி ஒத்துழைக்கமறுக்கையில் காரியம் சாதிக்க பிரயோகிக்கப் படுகிறது பலவந்தம். வளர்க்கும் நாய் சொன்னதைக் கேட்காவிடில் விழுகிறது அடி. பலவந்தம். குழந்தை அடம் பிடிக்கையில் விழுகிறது அடி. பலவந்தம். தேர்வுக்குப் படிக்காதபோது விழுகிறது அடி.பலவந்தம். புரியாததன்மையின் விளைவு. குழந்தை ஏன் அடம் பிடிக்கிறது?அதற்குப் பழக்கமில்லை. மிரள்கிறது. முதல் முறை பழக்கப்படுதல் அவசியம்.அதைச் செய்யநிர்ப்பந்திக்கப்படுகிறது. தேர்வுக்குப் படிக்காதது கவனச்சிதைவு அல்லது விருப்பமின்மை. ஆனால், தேர்வு இன்றியமையாதது. அதன் முக்கியத்துவம் பெற்றவனுக்குத் தெரியும். அது பிள்ளைக்கும் தெரியவேண்டும். ஆர்வம் மேலிட புரியும்படி பாடம் சொல்லித்தரத் தெரியவில்லை. விளைவு, பலவந்தம்.
மாலதி, ரவிக்கை அணிந்து, புடவை கட்டி, கழுத்தில் ஒரு மெல்லிய தங்க செயினும், இரு கைகளிலும் தலா ஒரு மோதிரமும், வளையல்களும் அணிந்து தயாராகையில் மணி நான்கரை ஆகியிருந்தது. 'மாப்பிள்ளைப் பையனைப் பிடித்திருக்கிறதா?' என்று ஒருவரும் கேட்கவில்லை. அருகிலிருந்தால் பேச நேர்ந்துவிடுமோ என்று ஆளுக்கொரு பக்கம் ஒளிந்தது போலிருந்தது. தனித்து விடப்பட்ட மாலதிக்கு அழுகை வரும் போல இருந்தது. மீண்டும் பயம் வந்தது.உண்மை இருக்கும் இடத்து தெளிவு இருக்கும். தைரியம் வரும். துணிவு வரும். தன்னம்பிக்கை இருக்கும். ஓடி ஒளியத் தோன்றாது. பொய் இருக்கும் இடத்தில் தெளிவு இருக்காது. தெளிவு இல்லையேல் தன்னம்பிக்கை இருக்காது.ஓடி ஒளிய வேண்டி இருக்கும். இப்படியான செய்கைகள் பெற்றோரிடமிருந்தே ஒரு பெண்ணுக்கு நிகழ்வது என்பது ஒரு உச்சகட்ட நம்பிக்கைத் துரோகம்.பெற்ற தாய், ஒரு பெண்ணுக்கு முதுகெலும்பு. தாயை ஒட்டியே வளர்கிறாள் மகள். தாய் ஒரு தோழி போல. தந்தை, ஆண் வர்க்கத்தின் முதல் பிரதிநிதி.முன்னுதாரண ஆண். ஆனால், அவர்களே புறமுதுகு காட்டுகையில் தனித்து விடப்படுகிறாள் பெண். நிராதரவாக உணர்கிறாள். மனதளவில் உடைகிறாள்.பலவீனமடைகிறாள். பற்றிக்கொள்ள கழுகொம்பு தேடுகிறாள். அந்த சமயம்,யாரேனும் ஆதரவுக்கரம் நீட்டினால், பேதையெனதன்னை இழக்கிறாள்.
மாலதிக்கு விருப்பமின்மை.
புகைப்படத்தில் பெண் பார்க்க இருக்கும் பையன், ஒரு டீசர்ட்டும், சாதாரண ஜீன்ஸும் அணிந்திருந்தவாறு இருந்தான். அது தவறா? தவறில்லை.ஐந்திலக்க ஊதியம் வாங்குபவனுக்கு, ரசனையாய் உடை உடுத்தத் தெரியவில்லையே என்கிற ஆதங்கம். ஐந்நூறு ரூபாய்க்கு வாங்கும் உடைகள் ஆறே மாதத்தில் நைந்து போகும். ஆயிரத்து ஐந்நூறு லெவி ஸ்ட்ராஸ் என்றாலும் வருடக்கணக்கில் நிற்கும். நிறம் அள்ளிக்கொண்டு போகும்.உடுத்தினால் மதிப்பாய் இருக்கும்.அதைத் தேர்ந்தெடுக்கஉடை உடுத்துவதில் சாதுர்யத்துடன் கூடிய ரசனை வேண்டும். வயது 27 என்றார்கள். ஆனால்,தோற்றம் 35 என மதிக்கச் செய்தது. ஐந்தரை அடியில் நிமிர்ந்து நின்றால் கணுக்கால் தெரியாத அளவில் தொப்பை. தொப்பை இருந்தால் மோசமானவன் என்றா பொருள்? இல்லை. ஆனால், வளர்ந்து வரும் சூழலில், தேகப்பயிற்சி நோயையும் விரட்டும், உடலையும் கட்டுக்கோப்பாய் வைக்கும். தேவை,நேரத்துக்குப் பயிற்சிக்கூடத்தில் மெனக்கெடுதல். அது கூட இல்லையெனில்,சோம்பேறியாக இருப்பானோ என்று நினைக்கத் தோன்றியது. வங்கிக் கடனில் சுலபப்படும் பொறியியல் இன்றைக்குத் தனக்கே சாத்தியப்பட்டுவிட்டதில் தன்னை ஆள வேண்டிய கணவன் என்கிற ஆண்மகனுக்குத் தன்னை விட அதிகமான திறமைகள் இருக்கவேண்டும் என்று ஒரு பெண் எதிர்பார்ப்பதில் என்ன தவறு? மேலும், இது எல்லாமுமே கொஞ்சம் மெனக்கெட்டால் சாத்தியப்படக்கூடிய ஒன்றுதானே. அப்படியொன்று இயலாத காரியமல்லவே.
ஆனால், அது அவளின் பெற்றோருக்குப் புரியவில்லை. ஏன் புரியவில்லை?ஏனெனில் தலைமுறை இடைவெளி. அவர்களால் பிள்ளைகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாததற்கு, புரியாததொழில் நுட்பமும் ஒரு காரணம். 2012 ம் வருடத்தில் 1935ன் மனப்பக்குவம் எப்படி போதும்? அவர்களைப் பொறுத்தமட்டில், பெற்ற பெண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமை செய்ய வேண்டும். காரியம் ஆக வேண்டும்.
'தான் ஏன் பழக்கமில்லாத ஒருவரைப் பற்றி இத்தனை தவறாக நினைக்கிறோம்,ஏன் சேற்றை வாரி இறைக்கிறோம்? இது சரியா அல்லது தவறா? குறை தன் மீதா? அல்லது அவன் மீதா?,தனக்குள் முளைத்த இந்தக் கேள்விகள் ஏன் மற்றவர்களுக்குத் தோன்றவில்லை? உலகில் எல்லா பெண்களுக்கும் இதுதான் கதியா? இல்லை, தனக்கு மட்டும்தான் இதெல்லாம் நிகழ்கிறதா?' மாலதியின் பேதை மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. நடப்பது நடக்கட்டும். இனி தடுக்க இயலாது. யார் கண்டது? வருகிறவர்களுக்குத் தன்னைப் பிடிக்காமல் கூட போகலாம். எப்படியாகினும், வந்தவர்கள் வந்த காரியம் முடித்துவிட்டுச் சென்றபின் அப்பா, அம்மாவிடம் பேசிக் கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டாள்.மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
நேரம் செல்லச் செல்ல ஒரு தீர்மானமான அவசரம் எல்லோரையும் தொற்றிக்கொண்டது போலிருந்தது. நாராயணனும் வள்ளியும் பார்க்கும்படி உடுத்திக் கொண்டார்கள். வீட்டை ஒதுங்க வைக்கத் துவங்கியிருந்தார்கள்.வருகிறவர்களை எங்கெங்கு அமரவைக்கலாமென்று தங்களுக்குள் விவாதித்து இருக்கைகளை இடம்மாற்றிக் கொண்டிருந்தார்கள். வள்ளி மறக்காமல்,பூஜையறையை அண்டி, குங்குமச் சிமிழில் குங்குமம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். அணைந்திருந்த ஒன்றிரண்டு மின்விளக்குகளையும் ஒளியூட்டி வீட்டைப் பிரகாசிக்க வைத்தார்கள். சமையலறையில் தேநீரும்,குளிர்பானங்களும் தயாராக இருந்தன. ஐந்து அலங்காரத் தட்டுகளில் இனிப்பும்,காரமும் பகிரப்பட்டுத் தயார் நிலையில் இருந்தன. மாலதியை யாரும் கவனித்தது போல் தோன்றவில்லை.
திடீரென்று யாரும் எதிர்பாராத வண்ணம் மின்சார வினியோகம் தடைப்பட்டது.மின் விளக்குகள் அணைந்தன. மின்விசிறி ஜீவனின்றி சோர்ந்தது.
"அய்யய்யோ! போச்சு!!" நாராயணன் அலறினார்."நான் அப்போதே சொன்னேன். காலையிலேயே வரச்சொல்லிவிடலாமென்று.இப்போது பாருங்கள்" சலித்துக்கொண்டாள் வள்ளி.மாமா அக்கம்பக்கம் விசாரிக்க விரைந்தார். விசாரித்துவிட்டு பக்கத்து தெருவில் மின்சார வாரிய வேலை என்று அறிவித்தார்.
"அய்யோ! அவர்களை வேறு வரச்சொல்லிவிட்டோம். என்ன செய்வது?சமாளிக்கலாமா வள்ளி?"
"சமாளிக்கிறதாவது?!.. வியர்த்து வரும். நொசநொசத்துப் போகும். இப்போதே பாதி இருள். அவள் புடவை எடுக்காது. வேண்டாங்க.""ஹ்ம்ம்.. அப்படியானால், என்ன செய்யலாம்?"
"வரவேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். இன்னொரு நாள் பார்க்கலாம்"என்றாள் வள்ளி."ஆமா அத்தான், எனக்கென்னமோ இது நல்ல சகுனமாகப் படவில்லை.எதற்கும் அந்தப் பையனைப் பற்றிக் கொஞ்சம் விசாரிப்போமே, அப்படியே நம்ம தரகர் ஒரு பையனைப் பற்றிச் சொன்னார். அதையும் பார்க்கலாம்" என்றார் மாமா.மாலதிக்கு, வயிற்றில் பால் வார்த்தது போலிருந்தது
0 comments:
Post a Comment